உணவு மழைத் தீவு - 13 :
பாதாள அறைகளில் தீவே குடியிருந்தது. எதிர் வரும் ஆபத்தைத் தவிர்க்க. ஆனால் அதுவே இப்போது ஆபத்தாகிவிட்டது. தீவுகளில் இருந்த வீடுகள், கடைகள், அலுவலகம் அனைத்தும் தரைமட்டமாகிவிட்டது. உணவுப் புயல் தீவை நாசமாக்கிவிட்டது.
பாதாள அறைகளில் இருந்து மக்கள் வெளியேற விடாமல் இடிந்து நொறுங்கி விழுந்த வீட்டுக்கூரைகள் விழுந்து மூடியதால் தீவுமக்கள் யாரும் வெளியேற இயலாமல் பாதாளச் சிறையிலடைக்கப்பட்டது போல ஆகிவிட்டது. எவ்வளவோ முயன்றும் யாரும் பாதாள அறையை திறந்து வெளியே வர இயலவில்லை.
அந்தத் தீவின் புதிய அதிகாரி எப்படியோ தமது வீட்டின் பாதாள அறையிலிருந்து தப்பி வீட்டுக்கு வெளியே வந்தார். வீடே தரைமட்டமாகிக்கிடந்தது. தீவில் ஒரு ஜீவராசிகூட இல்லாமல் தான் மட்டும் இருப்பதைக் கண்டார். தம் குடும்பத்தை பாதாள அறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார். பின் அருகிலிருந்த வீட்டு இடிபாடுகளுக்கிடையே சென்று பாதாள அறைக் கதவுகளை உடைத்து உள்ளிருந்தவர்களை வெளியே அழைத்துவந்தார். வெளியே வந்தவர்கள், மற்ற வீடுகளுக்குச் சென்று அந்த வீடுகளின் இடிபாடுகளுக்கிடையே பாதாள அறை வாசலைக் கண்டுபிடித்து உடைத்து உள்ளிருந்தவர்களை மீட்டனர். ஏறக்குறைய நான்கு அய்ந்து மணி நேரங்களுக்குப் பின்னர் அந்தத் தீவு மக்கள் உயிரோடு வெளி உலகத்துக்கு வந்திருந்தனர். தீவில் குளம்போல் ஆங்காங்கே தக்காளிகள் உடைந்தும், முழுதாகவும் மிதந்துகொண்டிருந்தது. சிறுவர்கள் குதூகலமாக அந்த தக்காளிச் சாறில் நீந்தி விளையாடினர்.
பெரியவர்களோ, அடுத்து என்ன செய்வது என்ற திகைப்பில் முகங்களில் கவலைபடிய பேசிக்கொண்டிருந்தனர். தீவின் நிர்வாக அதிகாரி, "எந்தவிதமான மீட்புப் பணிகளும் செய்யவோ மறு சீரமைப்புச் செய்து குடியமர்த்தவோ வழியில்லை. சில நூறு மைல் தள்ளியுள்ள தீவுக்குச் சென்றுவிட்டால் நாம் அங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு பிழைக்க வழி தேடிக்கொள்ளலாம்" என்று நிலைமையை விளக்கிச் சொன்னபோது பலர் அதுதான் சரி, இந்தத் தீவு நமக்கு ஒத்துவராது என்று சொன்னார்கள். சிலர் கடல் கடந்து நாம் எந்த வசதியுமின்றி எப்படி அந்தத் தீவை அடைவது என்று கேட்டபோது எல்லோருக்கும் என்ன செய்வது? எப்படிப் போகமுடியும்? என்ற கேள்விகள் எழுந்தது.
"இன்று இரவை எல்லோரும் நம் பாதாள அறையிலேயே கழிப்போம். நாளைக் காலையில் வீட்டுக்கு ஒருவர் இதே இடத்தில் கூடி என்ன செய்வது? என்று யோசிப்போமே" என்று நிர்வாக அதிகாரி சொல்லக் கூட்டம் மெல்லக் கலைந்தது. எதிர்காலம் என்ன ஆகுமோ? எப்படியாகுமோ என்ற கவலை எல்லோரின் முகங்களிலும் தெரிந்தது. உணவுமழைத் தீவில் வானம் உணவுமழை பொழிவதை நிறுத்தியிருந்தது; அடுத்த உணவு எப்போது பொழியும் என்று சொல்ல தொலைக்காட்சி நிகழ்வும் இல்லை.
உணவுமழைத் தீவில் உணவு இனிமேல் பொழியுமா? பொழியாதா என்பதும் தெரியாது. பொழிந்தால் பசியாறலாம்; பொழியாவிட்டால் எப்படிப் பசியாற முடியும்? குழந்தைகளுக்கு என்ன செய்வது? பெரியவர்கள் கண் முன்னே விரிந்த இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாமல் வெகு நேரம் விழித்திருந்தனர். எப்போது தூங்கினார்கள் என்பது தெரியாது. உணவுமழைத் தீவில் இனி அடுத்து என்ன என்பதைத் தீர்மானிக்கும் அடுத்த நாளும் புலர்ந்தது.
இன்னும்பொழியும்.....!
வெள்ளி, 4 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக