உணவு மழைத் தீவு - 12 :
"வானிலை அறிக்கை வாசிப்பது வான தேவன். உணவு மழைத்தீவில் இதுவரை இல்லாத அளவில் உணவுப்புயல் வீசும். புயல் மணிக்கு 160 முதல் 175 மைல் வேகத்தில் வீசக்கூடும். உணவுப் பதார்த்தங்கள் சமைக்கப்பட்டோ, சமைக்கப்படாமலோ அப்படி அப்படியே தீவு முழுக்க விழும். பல மைல் வேகத்தில் இவை மின்னலைப் போல் விரைந்து தீவை நோக்கி வருவதால் தீவு மிகக் கடுமையான சேதத்துக்கு உள்ளாகும்.
பிற்பகல் 2:30-க்கு சூறாவளிக் காற்றோடு துவங்கும் உணவுப்புயல் தீவு வரலாற்றில் இது முதல் முறையாகத் தாக்குகுகிறது. ரொட்டிகளும், முட்டைகளுமாகத் துவங்கி தக்காளி, பூசணி போன்றவை அடுத்தடுத்து விழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூசணிக்காய் பூமியில் வந்து விழும் வேகம்தான் அதிகபட்ச சேதம் விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் குழு தெரிவிக்கிறது. இரவு 9 மணிவரை இந்த உணவுப் புயல் ஓய்வதும் பின்னர் தொடர்வதுமாக இருக்கும். எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் பாதாள அறைகளிலிருந்து வெளிவரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பாதாள அறையை விட்டு வெளியே வரலாம் என்ற அறிவிப்பு வரும்வரை யாரும் வெளியே வரவேண்டாம். வீட்டுக்கூரைகள் பலத்த சேதம் அடைய வாய்ப்பு இருப்பதால்
மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று தீவு நிர்வாக அதிகாரி கேட்டுக்கொள்கிறார். உணவுப் புயல் ஓய்ந்ததும் தீவில் நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடைபெறும்.
பொதுமக்கள் தீவை சுத்தப்படுத்தும் பணிக்கு தீவு நிர்வாகத்துக்கு ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது தீவு நிர்வாகம். இந்தப் புயல் உண்மையில் தீவு மக்களுக்கு ஒரு மிகப்பெரிய சோதனையான நேரமிது. அடுத்த அறிவிப்பு வரும்வரை உங்களிடமிருந்து விடைபெறுவது வானதேவன்.
செய்தி முடிந்து சிறிது நேரத்தில் பலத்த காற்று சூறாவளிபோல வீசியது. தொடர்ந்து வீடுகளின் மீது பாறாங்கல் விழுவதுபோல உரத்த சத்தத்தோடு விழுவதும் கூறை நொறுங்கும் சத்தமும் கேட்டவண்ணமிருந்தன. திடீரென்று மின்சாரம் தடைப்பட்டது. மக்கள் இருந்த பாதாள அறை கருங்கும்மென்று ஆகிவிட்டது. தயாராக இருந்த மெழுகுவர்த்திகளை கொளுத்திவைத்தனர். பெருத்த ஓசை தீவு எங்கும் கேட்டது. எல்லோரும் சிறை வைக்கப்பட்டது போல பாதாள அறைக்குள்ளேயே இருந்தனர்.
மின் தடை நீங்கவில்லை. எல்லோரும் தேவையென்றால் மெழுகுவர்த்தியைப் பொருத்திக்கொள்வோம். இல்லையென்றால் அணைத்து வைப்போம், என்று மெழுகுவர்த்தியை சேமித்துவைத்துக் கொண்டனர்.
வானமே இடிந்து வீட்டுமேல் விழுவது போல பெருத்த ஓசைகள் பாதாள அறைக்குள்ளும் கேட்டது. குழந்தைகள் நடுங்கினர். பெற்றோர்கள் குழந்தைகளை அரவணைத்து பாதுகாப்பாய் இருந்தார்கள். எப்படி இருந்தாலும் அவர்கள் தலைமேல் ஏதோ விழுவது போல பெருஞ்சத்தம் பெரியவர்களுக்கே அச்சத்தைத் தந்தது.
மணிக்கணக்காய் டப்...டமார்...டொம் என்ற சத்தங்கள் நள்ளிரவு வரை தொடர்ந்தது. மின்சாரம் அறுபட்டு மீளவும் வரவே இல்லை. குழந்தைகள் தூங்கிவிட்டார்கள். சத்தம் ஓய்ந்து இருந்த நேரத்தில் மெல்ல மேலே போய் நிலவரம் எப்படி என்பதை அறிந்து வர பெரியவர்கள் மேலே போனார்கள். தீவில் பாதாள அறையிலிருந்தவர்கள் எவருமே மேலே வர முடியவில்லை. அவர்களால் கதவைத் திறக்க முடியவில்லை. உயிரோடு புதைந்து கொண்டிருக்கிறோமோ என்ற பயம் அவர்கள் முகத்தில் கலவரத்தை விதைத்தது.
இன்னும்பொழியும்.....!
வெள்ளி, 4 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக