திங்கள், 31 ஆகஸ்ட், 2009

உணவு மழைத் தீவு ‍ 8 : தமிழண்ணா

உணவு மழைத் தீவு ‍ 8 :

"இன்றிரவு 6:30 மணியிலிருந்து சூடாகவும் சில மிதமான சூட்டிலும் இட்லிகளை வானம் பொழியும்; அதனைத் தொடர்ந்து இரு நிமிடங்கள் தோசைகள் சிறிதாகவோ அல்லது கொஞ்சம் பெரிதாகவோ கைபொறுக்கும் சூட்டில் விழக்கூடும்!

சிறுவர் சிறுமியர் இவற்றிலிருந்து விலகியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தோசைகளைத் தொடர்ந்து சாம்பார், சட்னிகள் பொழியும்; ஒரு சில நிமிடங்கள் சற்றுக் காரமான சாம்பார் சட்னியும், மிதமான காரத்தில் தொடர்ந்து பெய்யக்கூடும்.

ஓரிரு நிமிட இடைவெளிக்குப் பின் பூரி, ஆப்பமும், உருளைக்கிழங்கு கறியும், தேங்காய்ப்பாலும் அங்குமிங்குமாக மிதமான வேகத்தில் பொழியக்கூடும் என்று வானிலை தெரிவிக்கிறது

இன்றைக்கு காபி மட்டுமே கிடைக்கக்கூடிய சூழல் நிலவுகிறது. டீ இன்று கிடைக்காது என்பது மேகக் கற்றைகள் நிற மாற்றத்திலிருந்து தெரியவருகிறது. தேனீர் நாளை காலை கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது! தொடர்ந்து நாட்டு நடப்புச் செய்திகளை வானதேவன் வழங்குவார். உங்களிடமிருந்து விடைபெறுவது உணவுச் செய்தி அறிக்கையாளர் ருசிவாணன்!

ருசிவாண‌ன் அறிக்கையைக் கேட்ட‌ சிறுசுக‌ளுக்கு தாங்க‌ள் வெளியே போக‌ முடியாத‌ப‌டி ஆகிவிட்ட‌ க‌வ‌லையில் இருந்த‌ன‌ர். பெரிய‌வ‌ர்க‌ள் இர‌வு உண‌வைச் சேக‌ரிக்க‌ வெளியேசென்ற‌ன‌ர்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வெளிநாட்டு நிகழ்சியொன்றை வீட்டிலிருந்த சிறுவர் சிறுமியர் ரசித்துப் பார்த்தனர். விமானங்கள் வீர சாகசம் நிகழ்த்தியதைப் பார்த்து அதிசயித்தனர். உணவு மழைத் தீவில் விமானமே கிடையாது என்பதால் அது அவர்களுக்கு மிகுந்த வியப்பாக இருந்தது. சாப்பிடப் போகும்வரை அதைப்பற்றியே பேசினர். விமானத்தில் பயணம் செய்தால் எப்ப‌டி இருக்கும் என்று பேசிக்கொண்ட‌ன‌ர்.

அன்று இரவு சாப்பாட்டை ருசித்து ரசித்துச் சாப்பிட்ட சிறுவர் சிறுமியர் சிறிது நேர அரட்டைகளுக்குப் பின் தூங்கிப் போயினர். விடிந்தால் அவர்களுக்கு வானம் ஒரு மோசமான செய்தியைச் சொல்லப்போவது தெரியாமல் தூங்கிப் போயினர்.

இன்னும் பொழியும்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக