திங்கள், 31 ஆகஸ்ட், 2009

உணவு மழைத் தீவு - 6 : தமிழண்ணா

உணவு மழைத் தீவு - 6 :


உணவுமழைத்தீவில் பொழுதுபுலர்ந்தபோதுபலருக்கு அது சுகப்பொழுதாக இல்லை.தீவில் பெரும்பாலான வீடுகள் பலத்த சேதமடைந்திருந்தது. தீவு மக்கள் அனைவரும் பாதாள அறைகளில் இருந்ததால் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை.

வீடுகளுக்கு வெளியே வந்து பார்த்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்பட்டது. வட்டவட்டமாய் இரண்டடி உயரத்தில் எங்கும் வெள்ளையாகக் கிடந்தது. அதேபோல பறக்கும் தட்டு போல இளஞ்சிவப்பாகவும் கரிய நிறத்திலும் எங்கும் சிதறிக்கிடந்தது.

அதே நேரத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் சொல்லத் துவங்கிவிட்டதால் பாதாள அறையில் செய்தியைக் கேட்ட போதுதான் வெளியே கிடந்தது என்ன என்பதை எல்லோரும் அறிந்தனர்.

நள்ளிரவுக்கு மேல் வானவெளியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தீவில் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. வெள்ளை நிறத்தில் இராட்சச இட்டிலிகளும், பறக்கும் தட்டுபோல பிரம்மாண்ட தடிப்பாக தோசைகளும் பொழிந்தது.

இராட்சச இட்டிலிகள் மணிக்கு 16மைல் வேகத்தில் வந்து தீவுகளில் விழுந்தது. இதனால் தீவில் பல வீடுகளின் மேற்கூரை சேதமடைந்துள்ளது.

சேத மதிப்பு பல லட்சம் சாகரம் (நாம் ரூபாய் என்பது போல இந்தத் தீவில் சாகரம் என்பார்கள்) இருக்கும் என்று கருதப்படுகிறது. யாரும் இந்த இராட்சச‌உணவுப்பண்டங்களைத் தொடவேண்டாம். அதில் விசக்கிருமிகள் இருக்கக்கூடுமென்று தீவு விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நகர அதிகாரிகள் தக்க இயந்திரங்களைக்கொண்டு அப்புறப்படுத்துவார்கள்.

அதுவரை யாரும் தெருக்களில் நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். அடுத்த 30 நிமிடத்தில்மீண்டும் செய்திகள் வாசிக்கப்படும்" என்று அறிவிப்பாளர் சொல்லி மறைந்தார்.

சிறிது நேரத்தில் துப்புறவு இயந்திரங்கள் சாலைகளில் செல்லும் சத்தம் கேட்டது. கவச உடையணிந்த பணியாளர்கள் அதிகாரிகள் அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

பிரம்மாண்ட தூக்கு கருவிகள்,

தள்ளு கருவிகள், அள்ளும் கருவிகள்


சத்தம் காதைச் செவிடாக்கிக்கொண்டிருந்தது.

சிலமணிநேரங்களில் தண்ணீர் லாரிகள்

தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கழுவிக்கொண்டு போனது.

பின்னாலேயே ஈரத்தை உலரவைக்கும் காற்றூதி வாகனம் செல்ல சிலமணிநேரங்களில் அந்தத் தீவு தூய்மையாகிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக