உணவு மழைத் தீவு - 7 :
சிறுவர்கள், சிறுமிகள் சாலைக்கு வந்து வேடிக்கை பார்க்கத் துவங்கினர். அவர்களுக்கு பள்ளி வாரவிடுமுறை. அதனால் சிறார்கள் கூட்டம் கூட்டமாக நண்பர்களோடு அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். தங்களுக்குத் தெரிந்த விளையாட்டுகளில் ஈடுபட்டனர். இரவெல்லாம் பாதாள அறையில் பயந்துகொண்டே இருந்தது குறித்துப் பேசினர்.
பெரியவர்கள் வீட்டுக் கூரைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். உடனடியாகச் செய்யாவிட்டால் அடுத்த நேரம் வானம் பொழிவதெல்லாம் வீட்டுக்குள் அல்லவா வந்து விழும்! அதனால் துரிதமாக வேலைகளைச் செய்துகொண்டிருந்தனர்.
"என்ன வாழ்க்கை? எந்த நேரம் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வாழவேண்டியிருக்கிறதே" என்று கவலைப்பட்டனர். வருடத்தில் ஓரிருமுறை இப்படியான "இடியாப்ப" சூறாவளி ஏற்படும்போது உணவுமழைத்தீவில் இதுபோன்ற சேதங்கள் நிகழ்ந்துவிடுகிறது.
திடீரென்று சிறார்கள் ஓவென்று சத்தம் போட்டுக்கொண்டே வீட்டுக்கு வெளியே ஓடிவந்தனர். அவர்கள் ஓடி வந்ததற்கு காரணம் "வானிலை அறிக்கை"-தான். இன்னும் சிறிது நேரத்தில் போதுமான இடைவெளியில் சிறார்களுக்கான கோன் ஐஸ் கிரீம், ஐஸ் கிரீம் கேக், ரெய்ன்போ கட்லட், ஸ்கை குல்ஃபி போன்றவற்றோடு ஜூஸ் வகைகள், ஃப்ரூட் பஞ்ச் அங்குமிங்குமாகப் பொழியக்கூடும் என்ற அறிவிப்பைக் கேட்டுவிட்டுத்தான் அப்படி சத்தம் போட்டு ஓடிவந்தனர்.
இதற்குள் வீட்டுக்கூரைகளைச் செப்பனிட்டு முடித்து பெரியவர்கள் அலுப்போடு வீட்டுக்குள் செல்லவும் வானம் சிறார்களுக்கான சிறப்புச் சுவையுணவுகள் பொழியத்துவங்க சிறார்கள் பாடு கொண்டாட்டம்.
சிதறி விழுந்ததை ருசி பார்க்க வளர்ப்பு நாய்களும், பூனைகளும் கூட சிறார்களோடு போட்டிபோட்டு ஓடிக்கொண்டிருந்தன. ஐஸ்க்ரீம் சிறார்களுக்கு மட்டுமல்ல; பெரியவர்களும் இந்த ருசிபார்க்கும் படலத்தில் சேர்ந்துகொண்டனர்.
சிறார்கள் தங்களுக்குத் தேவையான உண் பொருள்களைச் சேகரித்ததும் தம் நண்பர்களோடு பேசிச் சிரித்து உள்ளே தள்ளிக்கொண்டிருந்தனர்.
சிறார்களின் முகங்கள் சாப்பிட்டதற்கு அடையாளமாக சாட்சி சொல்லிக்கொண்டிருந்தது. அவர்களின் ஆட்டம் பாட்டம் எல்லாம் அரைமணி நேரத்தில் முடிந்து போனது. வீட்டு வேலை செய்து அலுத்துப்போயிருந்தவர்கள் அந்தத் தீவிலிருந்த ஒரே ஒரு உணவகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
வானம் பொழியும்போது உணவகம் எதற்கு என்கிறீர்களா? சில நேரங்களில் சிலர் வானம் பொழிவதை தங்களுக்காகச் சேகரம் செய்ய இயலாமல் போய்விடும்போது அவர்கள் உணவகம் தேடிப்போவது வழக்கம்.
உணவகத்தில் வானத்திலிருந்து பொழிந்ததை எடுத்து வைத்து வாடிக்கையாக வருவோருக்கு வழங்குவார்கள். வானம் சிலசமயம் சாப்பிட இயலாதபடி பொழிந்து தள்ளிவிடும்போது வீடுகளில் சேமித்து வைத்துக்கொள்ளாதவர்கள் உணவகம் வருவது உண்டு.
இங்கு சாப்பிடுவதற்கு கட்டணம் ஏதும் இல்லை. அங்கு பரிமாறுபவர்களுக்கு விரும்பிய காசை/தொகையைக் கொடுத்துவிட்டு வந்துவிடலாம். இப்படி எல்லா இடத்திலும் இருந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறீர்களா? தம்பி தங்கைகளே!
உணவுமழைத்தீவு மக்கள் கொடுத்து வைத்தவர்கள் என்கிறீர்களா? அப்போது இரவு உணவுக்கான வானிலை அறிவிப்பு தொடங்கியது.
உணவு மழை இன்னும் பொழியும்...
திங்கள், 31 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக